Family


குடும்பஜனநாயகம்

கு.செந்தமிழ்செல்வன்

“எங்கள்வீட்டில் அப்பா கடை பிடித்த குடும்ப ஜனநாயகம் தான் நாங்கள் சுதந்திரமாகவும் மாற்றுச் சிந்தனையுடன் வளர காரணமானது. குழந்தை வளர்ப்பில் முக்கிய கூறு குடும்பஜனநாயகம்” இப்படி விழியன் தனது உரையில் குறிப்பிட்டவுடன் கூட்டத்தில் இருந்தவர் பலரின் பார்வை எங்கள் மீது விழுந்தது. கூட்டம் முடிந்த பின்பும் எங்களிடமே குடும்பஜனநாயகம் என்றால் என்ன எனக் கேட்டார்கள்.
நகரத்தில் இருந்த வீட்டை விற்று நிலம் வாங்கினேன் என்று நான் குறிப்பிடும் போதேல்லாம் என் மீது வீசப்பட்ட கேள்வி,
“உங்கள் வீட்டில் அனைவரும் இதற்கு சம்மதித்தார்களா?” என்பது தான்.
அப்போதும் நான் குறிப்பிட்டது எங்கள் குடும்பத்தில் எடுக்கும் ஜனநாயகமான முடிவு தான் வலுவாக இணைந்து செயல்பட உதவியது என்றேன்.
எங்களை இந்த சமூகத்தின் முன் அடையாளப்படுத்தும் அந்தக் குடும்பஜனநாயகம் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன்.
ஜனநாயகம் எல்லோருக்கும் பிடித்த வார்த்தைதான். ஜனநாயகம் நம்மீது சுதந்திர காற்று வீசும் போது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஜனநாயகம் என்பது நாட்டிற்குத் தான் என பலரும் புரிந்து கொண்டுள்ளனர். ஜனநாயகம் என்பது எந்த இரண்டு மனிதருக்குள்ளும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை.
ஒரு குழுவிற்குள் அல்லது ஒரு அமைப்புக்குள் நிலவும் இனிமையான சூழல். மனிதனின் மிகப்பெரிய மாண்பு அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தான். இதுவே ஜனநாயகத்தின் அடையாளம்.
குடும்பம் என்னும் அமைப்பிற்குள் தான் நாம் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் பயணிக்கிறோம்.
அங்கு ஒரு இனிய சூழலுடன் இயங்குவது தான் நமது வெற்றியின் அடித்தளம். கணவன், மனைவி, அம்மா, அப்பா மற்றும் குழந்தைகள் இவர்களில் எந்த இருவருக்குள்ளும் ஜனநாயகத்தன்மை ஊடுருவி இருக்க வேண்டும். இந்த குடும்பத்துடன் நெருங்கிய உறவு கொண்டோருடனும் இந்த ஜனநாயகம் விரிவுப்படுத்தப்பட வேண்டும். உதாரணம் மாமனார், மாமியார், நெருங்கிய உறவினர்கள்(சகோதரர்,சகோதரி குடும்பம்) மற்றும் குடும்ப நண்பர்கள்.
அதுசரி, குடும்பத்திற்குள் ஜனநாயகம் என எதை அர்த்தப்படுத்துகிறோம்.
உணர்வுகளைப் புரிந்து நடப்பது:
ஒருவர் உணர்வினைப் புரிந்து நடந்து கொள்வதுதான் அடிப்படை. ஒருவருக்கு பிடிக்காத செயலை தவிர்ப்பது. இது சிறிய மற்றும் பெரிய செயல்கள் அனைத்துக்கும் பொருந்தும் .
குடும்பங்களுக்கு வெளியேயும் நம்மை உயர்த்த உதவும். குழந்தைகளிடம் காட்டும் கண்டிப்பின் போதும் இதனை மனதில் நிறுத்த வேண்டும்.
கண்டிப்பு என்பது வேறு, கட்டாயம் என்பதுவேறு.
இதன் மறுபக்கம் குழந்தைகளின் விருப்பம், நாம் எப்போதும் புறம் தள்ள முடியாத, நமக்கான கட்டளையாக பாவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வெளிப்படையாகஇருப்பது:
பிறர் உணர்வினை ஏற்கும் சூழல் இருந்தால் பொதுவாகவே வெளிப்படையாகவே அனைத்துச் செயலும் இருக்கும். எந்த ரகசியத்தையும் மனது தூக்கிச் சுமந்து கொண்டு திரிய வேண்டியதில்லை.
இது மற்றவர்கள் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையின் அளவுகோளாக அமையும்.
நம்முடைய உணர்வு தளத்திற்கு மற்றவர்களையும் அழைத்துச் செல்வது மிகமிக அவசியம்.
அவர்களை வளர்க்கவும் உதவும். குழந்தைகளுக்குப் புரியாது என எதனையும் மறைக்க வேண்டியதில்லை.
பெற்றோர்கள் மறைக்கும் போது தாங்கள் ஒதுக்கப்படுவதான உணர்வுகள் பிறகு வளர்ந்த காலத்தில் அவர்களுக்கு ஏற்படும்.
தவறு செய்யும் உரிமை: தவறுகள் எங்கே தண்டிக்கபடாமல் புரிந்து கொள்ளப்படுகிறதோ, அங்கே தவறுகள் குறைந்து விடும்.
தவறுகள் நடப்பது இயல்பு. அதனை மீண்டும் நடைபெறாமல் தடுப்பது தான்யதார்த்தமான அணுகுமுறை.
ஆவேசப்படுவதும், வார்த்தகளை வீசுவதும், தவறு செய்தவர்கள் தவறை உணர்வதற்கு பதிலாக தவறினை நியாயப்படுத்தும் சூழலுக்குத்தள்ளும். தவறு செய்பவர்களும் தவறினை ஏற்று கொள்வதும் நல்ல உறவின் தொடர்ச்சிக்கு வழிவகுக்கும்.
அச்சத்தில் இருந்து விடுதலை:
எந்தச் சூழலிலும் எத்தகைய அச்சத்திற்கும் நாம் தள்ளப்படாமல் இருந்தால், ஜனநாயகம் அந்த வீட்டு நடுவில் அமர்ந்திருக்கிறது என்று பொருள்.
ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள பாசம், அன்பு, நம்பிக்கை இவைகள் எல்லாம் சேர்ந்தே அச்சத்தை ஒழித்துக்கட்டும்.
அச்சமற்ற செயல்பாடே புதிய முயற்சிகளுக்கு வழிவிடும். புதியமுயற்சிகளே நமது தனித்துவத்தை காட்ட உதவும்.
ஆக, வீட்டில் நிலவும் ஜனநாயக உறவே நமது உச்சத்தைத் தீர்மானிக்கிறது என்பதை உணர வேண்டும்.
கூட்டுமுடிவு:
நமது வாழ்வைத் தீர்மானிப்பவைகள் நாம் எடுக்கும் முடிவுகள்தான். நாம் இப்போது எங்கே நின்றாலும் அது நாம் எடுத்த முடிவுகளின் கூட்டல் தொகையே. நமது முடிவுகளை நமது குடும்பஉறுப்பினர் அனைவருடன் அமர்ந்து விவாதித்து முடிவெடுப்பது அற்புதமான .
குழந்தைகளும் அதில் பங்கேற்க வேண்டும் என்பதை அடிகோடிட வேண்டுகிறேன்.
அவர்களை ஜனநாயக மாண்புகளுடன் வளர்க்க உறுதுணையாக அமையும். அவர்களின் புரிதல் நிலைகளை நாம் உணரமுடியும்.
விவாதித்து எடுக்கும் முடிவுகள் பொதுவாகத் தவறாகப் போவதில்லை. சந்திக்கவேண்டிய சவால்களுக்கும் அனைவரையும் தயார்படுத்திவிடும். குடும்ப்பம் செல்லும் திசை வழியினை அனைவருக்கும் வெளிச்சமிடும். இணைந்து செயலாற்றும் பொறுப்பினையும் தரும். கூட்டுமுடிவு கூட்டுசெயல்பாடு எனும் கோட்பாட்டினை ஆழமாக விதைக்க உதவும்.
குடும்பஜனநாயகம் தான் ஆரோக்கியமான, அமைதியான குடும்ப சூழலைத்தரும்.
அந்தகைய சூழலே வளமான வாழ்விற்கு வழிவகுக்கும்.
உணர்வுகளைப் பகிர்வது:
தனக்கு ஏற்படும் மகிழ்ச்சி, துக்கம், வெற்றி தோல்வி அனைத்துமே குடும்பத்தில் பங்கிடுவது அவசியம். இது ஒருவரின் மனோ நிலையினை புரிந்த கொள்ளவும் உதவும். அலுவலகத்தில் அவருக்கு இருக்கும் நெருக்கடிகள், மன அழுத்தங்கள் நிச்சயமாக வீட்டில் எதிரொலிக்கும். இந்தப் பின் புலத்தை வெளிப்படுத்த வில்லை எனில் எரிச்சல்கள் வீடு முழுக்க வியாபிக்கும். தங்களது வெற்றிகளை பெருமையுடன் சொல்பவர்கள் பலர் தங்களது தோல்விகளை தன்மான உணர்வுகளால் மறைத்துவிடுவதுண்டு.


உண்மையான…உயிரோட்டமான……உரையாடல்

கு.செந்தமிழ்செல்வன்



உங்க தொலைகாட்சியை கொஞ்சம் நிறுத்தரீங்களா?
எதற்கு ?
உங்க கவனத்தைக் கொங்சம் திருப்பரீங்களா?
எதற்கு ? எதற்கு??
உங்களோடு உரையாடத் தான்
உரையாடவா?
ஆமாம்
எதைப்பற்றி?
உரையாடலைப் பற்றித் தான்.
என்னது?
உரையாடலைப் பற்றிய உரையாடல் தான்.
அடடே சுவாரிசமானது தான்.
சரி, யாருடனெல்லாம் உரையாடல் நடக்குது?
எந்த இரண்டு பேரும் உரையாடலாம் ஆமாம், உரையாடல் எங்கும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. உரையாடல் கற்றலின் ஒருவடிவம் அல்லவா?. நீங்கவாத்தியாரா? ஏன்? “மாணவர்களுடன் உரையாடு” என எங்களுக்குத் தான் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உரையாடல் மிக அவசியம் அல்லவா? அதுதான் எப்படி நடக்கிறது என்பதுதான் எல்லோரின் கவலை.
“உரையாடத் தெரியுமா?” என்று கேட்பதுபோல் உள்ளது. “சாப்பிடத் தெரியுமா?” என்று கேட்கலாமா? உண்மையில் “சாப்பிடத் தெரியுமா?” என்று நாம் அனைவருமே கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளோம்.
வழக்கமானவற்றையும் கேள்வி கேட்பதுதானே அறிவியல் அணுகுமுறை. பன்னிரண்டு ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். அனுபவம்பேசும் அல்லவா?
நிச்சயமாக. அனுபவத்துடன் அன்பும் சேர்ந்தால்…..
அன்பு இருக்குமிடத்தில் உரையாடல் இயல்பாக அமைந்துவிடும். அன்பு இன்றேல் உரையாடல் இல்லை. உரையாடலின்றி அன்பு இல்லை. இதன் மற்றொரு பகுதியாக உரையாடல் அதிகாரம், ஆணவம் நிலவும் இடத்தில் செயல்படாது.
உரையாடலுக்கே தத்துவம் சொல்வீர்களோ?
அனுபவத்திலிருந்துதான் தத்துவங்கள் பிறக்கின்றன. அதனை உணர்ந்து சொல்பவர்கள் தான் அறிஞர்கள். உரையாடலை பற்றி சொன்ன அறிஞர்களும் இருக்கிறார்களோ?
ஆமாம்.
அவர்தான் “பவுலோபிரையர்” (Paulo Freire). பிரேசில் நாட்டின் கல்வியாளர் விமரிசனக் கல்வியை முன்வைத்தவர்.
சுவாரிசமாக உள்ளதே. மேலே சொல்லுங்கள்.
குடும்பஜனநாயகத்திற்கு கணவன் மனைவியிடையே உரையாடல் உயிரானது.
தனது தாய்-தந்தை உரையாடல் மூலமே கற்றுக் கொண்டு உரையாடலை வாழ்வின் பண்பாகவளர்த்துக் கொண்டவர் பவுலோபிரையர்.
“உரையாடலே உலகையும் மனிதனையும் நேசிக்கும் ஒருமுயற்சி” என்றார்.
உரையாடலுக்குஅவ்வளவுசக்தியா?
விமரிசனம் இன்றி மவுனித்துக் கடக்கும் மக்களின்போக்கை “ மவுனகலாச்சாரம்” என்று அவர்தான் குறிப்பிட்டார்.
இந்த “மவுனகலாச்சாரம்” மக்களை தம்மை ஒடுக்கும் சக்திகளை அறியாதவர்களாக்குகிறது.
விமர்சனவழி முறையில்லா மவுன கலாச்சாரத்தால் பள்ளிகள் உட்பட கலாச்சார ஊடகங்களின் கருத்தாக்கத்தால் ஒடுக்கு முறைகளை நியாயமானவை என்று வாய் மூடிக்கிடக்க வைக்கிறது என்றார்..
“அர்த்தமுள்ள பேச்சு உலகத்தையே மாற்றும்” என்றும் இதனால் தான் சொன்னாரா?
ஆமாம்,
“உலகை மாற்ற மனிதர்கள் உலகோடு கொள்ளும் உறவே உரையாடல்” என்றார்.
உரையாடல் பாடத்தைப் புரியவைக்க மட்டும்தான் என்று நினைத்திருந்தேன்.
“உரையாடல் மூலம் சமூக மாற்றத்தை நிகழ்த்துவது தான் கல்வி” என வலுவாக நம்பினார்.
உரையாடல் மீது பவுலோ பிரையர் கொண்டிருப்பது அசாத்தியமான நம்பிக்கைகள் தான்.
”வகுப்பறையில் என்ன செய்ய இயலும்?” என்று இருப்பவர்களை அவரின் வார்த்தைகள் உசுப்புகின்றனவே.
நாங்கள் என்னதான் செய்ய?
“நான் உலகை நேசிக்கவில்லையெனில் ,
நான் வாழ்வை நேசிக்கமுடியாது.
நான் மக்களை நேசிக்கவில்லையெனில்
உரையாடலுக்குள் நுழைய இயலாது”
உலகையும் மக்களையும் வாழ்வையும் நேசிப்பதுதான் உரையாடலுக்கான உந்துசக்தி. மக்களின் மீது வைக்கும் நம்பிக்கை தான் உரையாடலுக்கான முன் நிபந்தனையாக வைக்கிறார்.
ஆக உண்மையான உரையாடலை இனிமேல் தான் துவக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் பரஸ்பர அர்பணிப்பு என்பவைகள் உண்மையான உரையாடலின் தன்மைகள் என்கிறார் மார்ட்டின்பூபர் ( Martin Buber).
“உரையாடல்” என்ற ஒற்றை சொல்லுக்குள் உலகையே சுற்றி வருகிறீர்களே.
உலகையும் மனிதர்களையும் வாழ்வையும் நேசிக்கும் உரையாடலை அன்பையும் அர்ப்பணிபினையும் அடிநாதமான உரையாடலை நம்பிக்கையினை விதைக்கும் உரையாடலை உண்மையான ….உயிரோட்டமான……உரையாடலை வகுப்பறைக்கு உள்ளும் வகுப்பறைக்கு வெளியிலும் நிகழ்த்திக் கொண்டே இருப்போம்.
விவாதம்
“விவாதம் “ என்றால் நமக்கு வெல்லம்தானே?. அதுவும் கொஞ்சம் விசய ஞானம் இருந்தா பட்டய கிளைப்பிடுவோமில்ல.எதிர பேசுர ஆள் நோஞ்சானா இருந்தா? சொல்லவா வேண்டும் தரைமட்டம் தான்.எதிர ஆள் கொஞ்சம் கத்தி போடற ஆளா இருந்தா? . “விவாதம்” எல்லைதாண்டி “விதண்டா வாதம்” ஆகி இரண்டு பேரும் ரத்த காயம்தான்?
அடுத்தவர்களை வீழ்த்த கையில் கி டைத்த ஆயுதமா “விவாதம்”?
விவாதத்தின் நோக்கம்தான் என்ன?
விவாதத்தின் எல்லை எது?
விவாதத்தை எங்கு நிறுத்திக் கொள்ள வேண்டும்?
விவாதத்தில் யார் வெற்றி பெற்றவர்கள்?
இதைத் தெரியாமத்தான கத்திய வீசிக்கொண்டே இருக்கிறோம்.
நமக்குள் ஒரு “கருத்து” உருவாக பல காரணிகள் இருக்கலாம் . அந்த கருத்தே நமது நிலைபாடுகளும் வடிவமைக்கிறது. அந்தக் கருத்தும் நிலைபாடுகளே நமது செயல்களை வழி நடத்துகின்றன.
“தனியார் பள்ளிகள்தான் தரமான கல்வியைக் கொடுக்கின்றன” என்ற கருத்து ஒருவருக்கு இருக்குமானால் அரசுப்பள்ளியில் தனது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்காத நிலைபாட்டினை எடுக்கின்றார். இந்த “நிலைபாடு “ காரணமாக அரசுப்பள்ளிகளை மூடினாலும் அவர் வருத்தப்படமாட்டார்.
நமது கருத்து சரியா?தவறா? என்று எடைபோட்டுக் கொள்ள உதவும் அற்புதமான கருவிதான் “ விவாதம்”.
மேற்கண்ட “தனியார் பள்ளியா? அரசுப்பள்ளியா?” என்பதில் விவாதம் செல்கிறது எனக் கொள்வோம். விவாதம் இருவருக்குள்ளும் இருக்கலாம் பலபேருக்குள்ளும் இருக்கலாம்.
ஒவ்வொருவரும் தங்களது நிலைபாட்டுக்கான காரணங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். மற்றவர்கள் அதனை பொறுமையாக உள்வாங்கவேண்டும்.
இதன் முடிவு எப்படி இருக்கமுடியும்?
தனியார் பள்ளியை ஆதரித்தவர் இனி அரசுப்பள்ளியினை ஆதரிக்கும் நிலைக்கு மாற்றிவிடச் செய்யுமா?
பெரும்பாலும் உடனடியாக இருப்பதில்லை. அதிகபட்சம் அவரது காரணங்களை மறுபரிசீலனை செய்ய வைக்கும்.அவரை யோசிக்கவைத்தால் அதுதான் அந்த விவாதத்தின் வெற்றி.அவர் அரசுப்பள்ளியினை ஏற்றுக் கொள்ளும் வரை விவாதம் தொடர்ந்தால் விதண்டா வாதத்திலேயே முடியும். தடித்த வார்த்தைகளை தனது அடியாளாக கூட்டி வர வேண்டிவரும்.
“In life it's important to know when to stop arguing with people, smile and walk away”.
எப்போது விவாதத்தை நிறுத்த வேண்டும் , சிரித்துக் கொண்டே கடக்க வேண்டும் என்பது வாழ்வில் கற்க வேண்டிய முக்கிய மானது.
இரண்டு வயதில் நமது பெற்றோர்கள் நமக்கு பேசக் கற்றுக் கொடுத்து விட்டார்கள்.ஆனால், எப்படிப் பேச வேண்டும் என்பதைத்தான் நாம் எத்தனை வயதானாலும் இன்னும் கற்று கொண்டே இருக்கிறோம்.
கருத்தில் வேறுபட்ட இரண்டு நண்பர்களுக்குள்ளும் இத்தகைய விவாதங்கள் வரலாம். அடுத்தவர்களின் கருத்துக்களை கேட்கும் பக்குவம் இல்லை என்றால் நண்பனையும் பகைத்துக் கொள்ள நேரிடும்.
முரண்பாடு கருத்துக்களுக்குத்தான்,நண்பர்களுக்குள் அல்ல. அதனால் தான் விவாதங்கள் கருத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் .நபர்சார்ந்து அமைந்துவிடக்கூடாது. கருத்தினைக் கேட்கும் பொறுமையும் சகிப்புத்தனமையும் வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவர்களது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்க அனுமதிக்க வேண்டும்.
விவாதத்தின் எல்லை கடந்த அழுத்தத்தில் ஒருவரை வீழ்த்திவிட்டதாக தோன்றலாம் அனால் அது அவரை வெற்றி பெற்றுவிட்டதாக அமையாது.
It is very easy to DEFEAT someone, but it is very hard to WIN someone விவாதம் நீயா?நானா? என்ற வகையில் இருக்க வேண்டியதில்லை. நமது புரிதலில் உள்ள குறைபாடுகளை சான்றுகள் மூலம் தெளிவுபடுத்திக் கொள்ள உதவ வேண்டும்.
தனது “ஈகோவை” கைவிடாதவர் எனக்குத் தெரியாதா? என தன்னை முதன்மைப் படுத்தியே வாதிடுவார். தயாரிப்பில்லாமல் வாதிடுபவர் ஆதாரங்களை முன்வைக்காமல் தெளிவின்றி வாதிடுவார்.
மாற்றுக் கருத்து கொண்டுள்ளவரை வீழ்த்துவது மட்டுமே நோக்கமாகக் கொண்டால் அவர் சொல்வதை காதில் வாங்க மாட்டோம். நமது கருத்தினையே திரும்பத் திரும்பச் சொல்வோம்.அதனால், எந்தப் பயனும் இல்லை.விவாதம் விதண்டாவாதத்தில் நுழையும்.
எதிரி பலவீனமனவராக இருந்தால் கருத்தையும் ஏற்காமல் ( சில நேரங்களில் ஏற்பது போல் பாசாங்கு செய்து)இரணப்பட்டு சென்றுவிடுவார்.
எதிரி சற்று பலமானவராக இருந்தால் நம்மையும் காயப்படுத்தி அவரும் காயப்பட்டு கருத்தையும் ஏற்காமல் சென்றுவிடுவார். ஆக எந்த பயனும் இல்லை, காயப்பட்டது தவிர.
நமது இரணங்களின் தழும்புகளை தழுவிப்பார்க்கும் போது நமது தவறுகளை நாம் உணர முடியும்.
இரணங்கள் இல்லா, நட்பின்வழி விவாதங்களை முன்னெடுப்போம்.

தோல்விகளைக் கற்றுத் தருவோம்


கு.செந்தமிழ்செல்வன்

நோக்கம்:
வெற்றிக்கு கனவு காணும் பெற்றோர்கள்:
"என் பொண்ணு எப்ப பள்ளிக்கூட்த்தில சேர்ந்தாளோ அப்போதிலிருந்து அவள் தான் முதல் ரேங்க். ஒருமாதம் இரண்டாம் ரேங்க் வாங்கினாலும் அழுது தீர்த்து விடுவாள். அவளை விட அவங்க அம்மாவைத்தான் சமாதானப் படுத்த முடியாது''.
“LKG இலிருந்தே என் குழந்தையை எல்லா போட்டியிலும் கலந்துக் கவைக்கிறேன். எல்லாத்திலும் முதலில் வரணும். இதுதான் எங்கக்கனவு”.
இப்படி கனவு காணும் பெற்றோர்களை அன்றாடம் நம்மைச் சுற்றி பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.
பெற்றோர்களின் இந்த கனவுகள் மெய்ப்படட்டும்.
வெற்றிக் கனவு தரும் போட்டி மனோபாவம்
இந்தக் கனவுகள் மெய்ப்பட பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்?
குழந்தைகளிடம் வெற்றி மட்டும் தான் பெற வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிறார்கள்.
கற்றுக் கொள்ளும் முயற்சிகளில் கற்றல் பின்னுக்குத் தள்ளப்பட்டு போட்டி துரித்திக் கொண்டு முன்னுக்கு வந்து நிற்கிறது.
பல பள்ளிகளில் பாடங்களை முழுமையாக விளக்கி புரியவைப்பதில்லை. தேர்வுக்கு தயார்படுத்த அந்தப்பாடத்தில் உள்ள கேள்வி பதில்கள் மட்டும், அதுவும் முக்கியமானது மட்டும் மனப்பாடம் செய்ய வைப்பார்கள்.
11வது வகுப்புப் பாடங்களை நடத்தாமல் 12 வது வகுப்புத் தேர்வுக்கு தயார்படுத்துவதும் இவ்வகையே.
வீடியோ விளையாட்டிலும் வெற்றி மட்டுமே பெற வேண்டும் எனும் வெறித்தனத்தை தூண்டுகின்றன.
தொலைகாட்சிகளும் பாடலுக்கும் ஆடலுக்கும் குழந்தைகளுக்கு நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. ஆனால் அவைகளும் போட்டிகள் தான். தோல்வியுறும் குழந்தைகளின் அழுகையைக் காட்டி காட்டி மகிழ்கின்றன. அம்மாக்கள் அழுவதைக் காட்டுவதில்தான் பேரின்பம்.
இந்தப் போட்டிகள் குழந்தைகள் மனதில் வெறும் போட்டியாளர்களாக கருதச் செய்கிறது. புதியனதெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்குவதில்லை.
குழந்தைகளிடம் எப்போதும் போட்டி போட்டி என்பதே ஒலிக்கச் செய்கிறது. சகமாணவர்களை நண்பனாகப் பார்க்க திரைபோடுகிறது.
நண்பர்களையும் போட்டியாளர்களாகவே பார்க்கச் செய்கிறது. குழந்தைகள் மனதில் ஆழமாகப் போட்டி மனோபாவம் இடம் பிடித்து விடுகிறது.
போட்டி குணத்தின் விளைவுகள்:
இந்த அதீதையான போட்டி குணாம்சம் பலபக்க விளைவுகளை உருவாக்குவதை நாம் கவலையுடன் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
♦ எப்போதும் குழந்தைகளைப் பதட்டத்தில் வைத்து விடுகிறது.
♦ நண்பர்களையும் போட்டியாளர்களாக பார்க்க வைக்கிறது
♦ போட்டி என்றால், முதல்ரேங்க் பெற்று வென்றே ஆகவேண்டும் என்ற வெறித்தனத்தை மேலோங்கச் செய்கிறது.
♦ பெற்றோர்களுக்குச் செய்யும் ஒரே கடன் முதல்ரேங்க் வாக்கிக் காட்டுவது என சிந்திக்க வைக்கிறது.
♦ தோல்வியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாத மனநிலையை உருவாக்குகிறது
இவைகள் ஒவ்வொன்றும் குழந்தைகளின் ஆழ்மனதில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
வாழ்நாள் முழுவதும் சிதைக்கப்பட்ட மனஉணர்வுகளுடனே வாழ்கிறார்கள். சகமனிதர்களை நேசிக்கும் பக்குவம் பெறாததால் பெற்றோர்களையும் கைவிடும் காட்சிகளையும் பார்க்கிறோம். தோல்வியை ஏற்காத மனோ நிலையைப் பற்றிச்சற்று உற்று நொக்குவோம்.
தோல்வியைச் சந்திக்கும் போது
எந்தப் போட்டிகளிலும் பங்கேற்க வைக்கத் தயார்.
ஒரே நிபந்தனை வெற்றி மட்டுமே பெற வேண்டும்.
குழந்தைகள் தோல்வியுறும் போது அதிகமாகப் பயப்படுவது தோல்விக்காக அல்ல. தோல்விகளை ஏற்கத் தயாராக இல்லாத பெற்றோர்களைப் பார்த்துத் தான்.
10வது, +2 தேர்வு முடிவுகள் வரும் போதெல்லாம் பதட்டம் நிலவுகிறது. இதுதேர்வு முடிவுகளுக்காகவா? இல்லை., முடிவுகளைத் தொடர்ந்து வரும் துயரமான தற்கொலைச் செய்திகளுக்காக. வெற்றி போதையைத் தரும். ஒருவித தன்முனைப்பு(EGO) ஒட்டிக்கொள்ளும். நல்ல நண்பர்களைக் கூட இது இழக்கச் செய்துவிடும். எனக்குத் தெரியாததா?
என புதியனக் தெரிந்து கொள்வதற்கும் தடையாகிப் போகும். வெற்றியில்லையேல் வாழ்வே இல்லை என்ற அவநம்பிக்கை ஒட்டிக் கொள்ளும்.
தோல்வி சுவைக்கக் கூடாததா?
கசப்பு என்பதும் அறுசுவையில் ஒருவகை சுவையே. அதைப்போல தோல்வி என்பதும் வாழ்க்கையின் ஓர்அம்சம். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாததும்கூட. தோல்விகள்தான் நிறையக் கற்றுத் தருகின்றன.
புதியவைகளைத் தேடவைக்கின்றன. தோல்வியைப் போலச் சிறந்த ஆசான் இல்லை.
சாதனையாளர்களின் வரலாறு என்பது அவர்கள் தோல்விகளை எதிர்கொண்ட அனுபவங்களே. எத்தனை தோல்வி அனுபவங்களைக் புத்தகங்களில் வாசித்துக் கற்றாலும், தன்னுடைய சொந்த தோல்விகள்தான் சரியானப் பாடங்களைத் தரும்.
தோல்வியைக் கற்றுக் கொடுங்கள்
தோல்வி மனோபாவத்தை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது நம்கடமையல்லவா? ஒவ்வொருவர் வாழ்க்கை அனுபவமே தோல்விகளை எதிர்கொண்டது தானே.
ஆதலினால், தோல்விகளைச் சொல்லிக் கொடுப்போம்.
அதனை எதிர் கொள்ளும் திறனையும் தருவோம்.
படிப்பில், விளையாட்டில் தோல்விகள் பெறும் போதெல்லாம் சிறுவயது முதலே அவர்களை ஆதரியுங்கள். தோல்வி என்பது படிப்பினை என புரிய வைக்க பயன்படுத்துங்கள்.
நண்பர்களுக்கும் தோல்வி வரும் போது ஆறுதல் சொல்வதை வழக்கப்படுத்துங்கள். தோல்வி என்றாலே எதிர்மறை அல்ல.
தோல்விகளைக் கற்றவர்களே வெற்றியாளர்களாக விளங்குகிறார்கள்.
தோல்விகளைச் சந்திப்பவர்கள் தைரியசாலி ஆகிறார்கள்.
நேர்மறை எண்ணங்களுக்கு சொந்தக்காரர் ஆகிறார்கள். உறுதி கொண்ட நெஞ்சினரா கமலர்கிறார்கள்.
தோல்விகளைக் கற்றுத் தருவோம், வாழ்வை இனிமையாக்கித் தருவோம்.

கிராமத்து விளையாட்டு

(விளையாட்டில் மூழ்க)


“லீவுவிட்டாச்சா, வால அவுத்து விட்டாச்சா”
விடுமுறையில் வளர்ந்துவிடும் “வால்” பற்றியஅச்சத்துடன்அப்பா..
”டிவி, யுடியூப்பில் மூழ்கப் போறாங்க“ அங்கலாய்தார் அம்மா.
“கிராமத்துக்கு போகலாமே”
பாட்டி முன்மொழிந்து கொண்டே தாத்தாவைப் பார்த்தார்.
தாத்தா அதற்குள் கிராமத்துக்கே போய் விட்டார்.
குழந்தைகள் இருவரும் தாத்தாவை உலுக்கினார்கள்.
“தாத்தா, உங்களுக்கு லீவு விட்ட போது என்ன செய்தீங்க” பேரனின் கேள்வி.
“உங்க அம்மா, அப்பாவும் இப்படித்தான் லீவுவிட்டா அலரினார்களா?” விவரத்துடன் பேத்தி.
யாராவது தனது வாழ்ந்த நாட்களைப் பற்றி கேட்க மாட்டார்களா என தவித்துக் கொண்டிருந்த தாத்தாவின் நினைவலைகள் வேகமாக வீசத் தொடங்கியது.
முதலில் சிரித்தார்.
“அப்போதும் லீவுவிட்டால் அலறுவார்கள். ஆனால், எங்க அப்பா, அம்மா அல்ல” தாத்தா துவங்கினார்.
“பின்ன யார் அலருவார்கள்? ; மருமகள்.
“கிணற்றுக்காரர்கள். ஊரிலுள்ள பெரிய பெரியகிணற்றுகார்கள்.”
“ஏன், ஏன்?” ஆவலுடன் மகன்.
“லீவுவிட்டால் கிணறுகளில் தான் விழுந்து கிடப்போம். எங்களது பட்டாளம் ஒன்னா சேர்ந்தா கிணறே தூசாயிடும். தும்தும் என்று மேலிருந்து குதிப்போம்.
கிணறே அதிர்ச்சி கண்டு விடும். கிணற்றுக்காரர் அலறுவார்”
“தாத்தா, உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” பேரனின் ஆச்சரிய கேள்வி.
“எனக்கு மட்டுமில்ல ஊரிலிருந்த எல்லா பையன்களுக்கும் நீச்சல் தெரியும்.”
“பொம்பள பிள்ளைகளுக்கு நீச்சலும் கிடையாது” சந்தர்ப்பத்தப் பயன்படுத்தி பாட்டி செருகினார்.
தாத்தா தனது வேகத்தில் இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தார்.
“ நாங்க எவ்வளவு உயரித்திலிருந்தும் குதிப்போம். படிகட்டின் மேலிருந்து, கிணற்றின் மேலிருந்து, செட்டின் மேலிருந்து என உயர்ந்து கொண்டே போகும்.
பொம்ள பிள்ளங்க பார்த்தாங்க என்றால் அசந்து போவார்கள்”
“அவர்கள் அசந்து போகத்தானே உயர உயர குதிப்பீங்க” பாட்டியின் நக்கல்.
“தாத்தா,
நாங்கப் பார்த்த தெல்லாம் சின்ன சின்ன கிணறுகள், அதில் எப்படி குதிக்க முடியும்” பேத்தியின் யதார்த்தமான கேள்வி.
“பாசன கிணறுகள் பெரியதாக இருக்கும்.
துணிகளும் துவைத்து எடுத்துச் செல்வார்கள். ”தாத்தா கிணறுகளைப் பற்றித் தெரிவித்தார்.
“தாத்தா, எவ்வளவு நேரம் கிணற்றில் நீந்துவீர்கள்”

சிலநேரங்களில் பக்கத்தில் பனமரங்கள் இருக்கும். அதிலிருந்து பனங்காய் அறுத்து வாயால் கிழித்தே நுங்கு சாப்பிடுவோம். நீச்சல் தொடரும்.
சில நேரங்களில் விளையாட்டில் தகறாறு ஏற்பட்டு கரையேறுவோம்.”
“ என்னது. நீச்சலில் விளையாட்டா?” பேரனின் கேள்வி
“நிறைய விளையாட்டு. எத்தனை பேர் இருக்கிறோமோ அதற்கு ஏற்றார் போல் விளையாட்டுகள் மாறும்.
”தாத்தா “சிலத சொல்லுங்களேன்”
பாட்டி “ தண்ணிக்குள் யார் அதிக நேரம் மூச்சுப் பிடிக்கிறார்கள் என்பது மிகச் சாதாரண விளையாட்டு.
தாண்ணீருக்குள்ளேயே செய்வதாகவும் விளையாட்டுகள் இருக்கும். நீரில் மூழ்கிக் கொண்டே கிணற்றைச் சுற்றி வரவேணும். தண்ணீரும் மிகவும் தெளிவாக இருக்கும் உள்ளே ஆள்இருப்பது மட்டுமல்ல குச்சி போன்ற சின்னப் பொருளும் தெரியும்.
குச்சியினை கிணற்றின் அடியில் வைத்துவிட்டு ஒருவர் வருவார்.
குச்சி வெளியே வரும் வரை கூட காத்திருக்க மாட்டார்கள். உள்ளே மூழ்கி குச்சி எங்கே சென்றாலும் எடுத்து வந்து விடுவார்கள்.
சில நேரங்களில் தண்ணீர் 30’- 40’ ஆழத்திற்கும் இருக்கும். அவ்வளவு ஆழத்திற்கு மூச்சு பிடித்துச் சென்று அடிமண்ணை எடுத்து வர வேண்டும். யார் முதலில் எடுத்து வருகிறார் என்பது தான் போட்டி”.
“வெறும் நீச்சல் என்று தான் நினைத்தோம். ஆனால், ஆபத்தான விளையாட்டுகளாக இருக்கும் போல உள்ளதே. விபத்துக்கள் நடந்துள்ளதா?’ மகன்
“நிறைய இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒரு நண்பன் தண்ணீர் குறைவாக இருக்கும் போது உள்குத்து போட்டார். தலை நேராக தண்ணீரில் பாய்ந்தது. அந்த கிணற்றில் தண்ணீரும் குறைவாக இருந்தது, அடியில் சேறு இரண்டு மூன்று அடிக்குமேல் இருந்தது. அதனால் தலை அந்தச் சேற்றில் புதைந்து கொண்டது. அவனை உயிரோடு மீட்க முடியவில்லை..
கண் நோய்களும் வரும். கண் எவ்வளவு சிவந்திருக்கிறது என்பதை வைத்து எவ்வளவு நேரம் கிணற்றில் இருந்தோம் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.
உயரத்திலிருந்து குதித்து பலபேருக்கு விரைவீக்கம் ஏற்படும். விரைபலமாக தாக்கி ஒருவன் இறந்தும் இருக்கிறான். ஆனால், இவை எதுவும் நீச்சல் ஆர்வத்தை அழிக்கவில்லை. அவைகள் எங்களுக்கான எச்சரிக்கையாக வரும். கொங்சநாள் அச்சம் தாலைகாட்டும். சில நாளில் போய் விடும்” தாத்தா தளராமல் தொடர்ந்தார்.
“வெளியூரிலிருந்து செல்லும் நண்பர்களுக்கு நீச்சல் சொல்லித் தருவீர்களா?”
தாத்தா பலமாகச் சிரித்தார்.
“அவர்களுக்கு நீச்சல் கற்றுத் தருவதும் எங்களுக்கு ஒரு விளையாட்டே. நீச்சல் தெரியாமல் யாராவது வந்தால் எங்களுக்கு நல்லபொழுது போக்கு. அவர்களை கிணற்றின் கரையில் அமர்ந்து பார்க்கச் சொல்வோம். அவர் சுவாரிசமாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது கிணற்றில் தள்ளி விடுவோம்”.
“அய்ய்ய்யோ. நீரில் மூழ்கி விட்டால்” பயத்துடன் பேத்தி.
“நீரில் குதித்துதான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும். படம் பார்த்தா கற்றுக் கொள்ள முடியும்? தத்துவமாய் பேரன்.
“குதித்தால் தண்ணீரின் மேலே வந்துதான் ஆகணும்.
மேலே வந்தா குடுமி எங்கள் கையில் தான்.
அவர்கள் குய்யோ முய்யோ என்று கத்தி மூச்சு திணறுவார்கள். யாரேனும் ஒருவர் முதலிலேயே அவரை கீழிருந்து தாங்கிப் பிடிப்பார்கள். அவரின் பயம் தெளியும்வரை தண்ணீரேலே இருப்பார். இப்போது பாதிநீச்சல் வந்து விடும்.
அப்புறமென்ன, அவரே மறுநாள் தண்ணீருக்கு வந்து விடுவார். ஊருக்கு திரும்பும் போது நீச்சல் வீரராகத் திரும்புவார்.”
“தாத்தா, நான் நீச்சல் கற்றுக் கொள்ள ரெடி” பேரன் தயாராகி விட்டான்.
“அதுசரி அப்பா, இப்ப கிணறுகள் அப்படியுள்ளனவா? தண்ணீர் இருக்குமா?
சிறார் பட்டாளம் இருக்குமா? நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போதே கிணறுகள் வர்றி வந்தனவே”
“இப்போ கிணற்கள் ஏது?. கிணறுகள் எல்லாம் வற்றி விட்டன. வரண்ட குளத்து மீனாக சிறார்களும் கிணற்றுக்காக தவித்தார்கள்.
எங்கோ சில கிணறுகள் இன்றும் உள்ளன”.
“நீச்சல் தவிற என்ன விளையாடுவீர்கள்”.
“நிறைய விளையாடுவோம். அதற்கெல்லாம் விடுமுறை வரை காத்திருப்பதில்லை. தினந்தோறும் விளையாடுவோம். புத்தகம் மற்றும் நோட்டின் வேலை பள்ளியோடு சரி.
வீட்டுப்பாடம் எல்லாம் கிடையாது.
இரவிலும் திருடன் போலீஸ் விளையாடுவோம். யாராவது குழந்தை விளையாட வில்லையென்றால் உடம்பு சரியில்லையா என விசாரிப்பார்கள்.
பள்ளியிலும் விளையாட்டு பிரியடில் கண்டிப்பாக விளையாடுவோம். விளையாட்டு எங்கள் உயிர் மூச்சாக இருந்தது.
படிப்பு என்பதும் விளையாட்டின் இடையில் ஒரு இயல்பான செயலாக இருந்தது”.
அப்படி என்ன தான் விளையாடினீர்கள்.
“கோலி விளையாடுவோம். கோலி குண்டுகள் எப்போதும் எங்கள் பாக்கெட்டில் இருக்கும்.
பள்ளிபோகும் வழியிலும் நேரம் இருந்தால் புளியமரத்தடியில் குழிதோண்டி விடுவோம். புல்-கோட்டி எல்லா தெருவிலும் காணும் காட்சியாக இருக்கும்.
சாப்ட்பால் ஒரு பாப்புலர் விளையாட்டாக பள்ளியிலும் கிராமத்திலும் நடக்கும்.
பம்பரம் பலவடிவங்களில் நடைபெறும். சிகரேட் பெட்டியில் மேல்கீழ் அட்டைகளைச் சேகரித்து வைத்து கொள்வோம். இந்த அட்டைகளை வைத்து விளையாடி சேர்ப்போம். அப்போது பணத்தைவிட இந்த அட்டைகள் எங்களுக்கு மதிப்பு மிக்கதாக இருக்கும்.’
“ கேர்ல்ஸ்டூடன்ட் விளையாடவே மாட்டார்களா?”
“பெண் பிள்ளைகளும் விளையாடுவார்கள். ஆனால் எல்லோரும் ஸ்டூடன்ட் ஆக இருப்பதில்லை.
பெண் பிள்ளைகளுக்கென்று தனியான விளையாட்டுகள் உண்டு.
உள்ளரங்க விளையாட்டாக தாயம், ஆடு-புலி மற்றும் பல்லாங்குழி இருக்கும்.”
“இந்த விளையாட்டுகள் எல்லாம் இப்போதும் இருக்கின்றனவா? கிராமத்திற்கு போனால் விளையாட முடியுமா?”
“நிச்சயமாக. கிராமத்து மானவர்களும் பெரும்பாலும் விடுமுறையில் தான் விளையாடுகிறார்கள்.”
இப்போது தாத்தா பாட்டியின் கைகளை நால்வரும் பிடித்துக் கொண்டு “கிராமத்துக்கு போகிறோம்.
பத்து நாள் தங்குகிறோம். விளையாடுகிறோம்.”
“ரொம்ப சந்தோஷம். அங்கு வரும் போது மறக்காம ஒன்று செய்ய வேண்டும்.
என்ன சொல்லுங்க” எல்லோரும் முழித்துக் கொண்டிருக்கும் போது பாட்டி சொன்னார் “ செல்போனை சென்னையிலேயே விட்டு விட்டு வர வேண்டும்”
நாற்பது ஆண்டு வாழ்வில் தன்னைப் புரிந்து கொண்ட பாட்டியைப் பார்த்து கொண்டே தாத்தா சொன்னார் “மிகச்சரி. அப்போது தான். செல்லில் மூழ்காமல் சொல்லியதில் மூழ்குவோம்”

விழியனின் படைப்புகள்



விழியன் புத்தகங்கள் பெற
Vizhiyan Books Page


விழியன் முகநூல் பக்கம்
Vizhiyan Facebook Page

விழியன் வலைப்பூ
Vizhiyan Web Page